Friday, 7 May 2021

முல்லைப்பாட்டு

                                          முல்லைப்பாட்டு


 சங்கத் தமிழ் இலக்கியத்தில் பத்துப்பாட்டு என அழைக்கப்படும் தொகுதியின் ஒரு பகுதியே முல்லைப் பாட்டு. இத் தொகுதியுள் அடங்கியுள்ள நூல்களுள் மிகவும் சிறியது இதுவே. 103 அடிகளைக்கொண்ட ஆசிரியப்பா வகையில் இயற்றப்பட்டது. பாண்டிய அரசனான நெடுஞ்செழியனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு எழுதப் பட்டதாகக் கருதப்படினும், தலைவனுடைய பெயர் பாட்டில் குறிப்பிடப்படவில்லை.

முல்லைப்பாட்டு முல்லைத் திணைக்குரிய நூல், அகப்பொருள் பற்றியது. மழைக்காலத்துக்குமுன் திரும்பிவருவதாகச் சொல்லிப் போருக்குச் சென்ற தலைவன் குறித்த காலத்தில் வரவில்லை. தலைவியோ பிரிவுத் துயரம் தாளாமல் உடல் மெலிந்து வாடுகிறாள். விபரமறியச் சென்று வந்த தோழியரின் உற்சாக வார்த்தைகள் அவள் ஏக்கத்தைக் குறைக்கவில்லை. போரில் வெற்றி பெற்றுத் தலைவன் திரும்பியதும் தான் தலைவி ஆறுதலடைந்து இன்பமுறுகிறாள்.

இந்த நிகழ்ச்சிகளைக் கருவாகக் கொண்டு நப்பூதனார் என்னும் புலவர் கவிநயத்தோடு எழுதியதே முல்லைப்பாட்டு. இதுநெஞ்சாற்றுப்படை என அழைக்கப்படுகிறது.

மழைக்காலம் வருவதை உணர்த்தும் முல்லைப்பாட்டின் முதற்பாடல்:

  நனந்தலை யுலகம் வளைஇ நேமியொடு
  வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
  நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப்
  பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு
  கோடுகொண் டெழுந்த கொடுஞ்செலவு எழிலி


பாடியவர்:  காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார்
பாடப்பட்டவன்: தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
திணை: முல்லை, பா வகை:  அகவல்பா (ஆசிரியப்பா), மொத்த அடிகள்: 103

தமிழ் உரை நூல்கள்
பத்துப்பாட்டு (2 பகுதிகள்) – பொ. வே. சோமசுந்தரனார் – சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
நச்சினார்க்கினியர் உரை – உ. வே. உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை.

எளிய உரை: வைதேகி

நச்சினார்க்கினியர் உரை – இப்பாட்டிற்கு முல்லை என்று பெயர் கூறினார்.  முல்லை சான்ற கற்புப் பொருந்தியதனால்.  இல்லற நிகழ்த்துதற்குப் பிரிந்து வருந்துணையும் ஆற்றியிருவென்று கணவன் கூறிய சொல்லைப் பிழையாமல் ஆற்றியிருந்து இல்லற நிகழ்த்திய இயற்கை முல்லையாமென்று கருதி இருத்தலென்னும் பொருள் தர முல்லையென்று இச்செய்யுட்கு நப்பூதனார் பெயர் கூறினமையிற் கணவன் வருந்துணையும் ஆற்றியிருந்தாளாகப் பொருள் கூறலே அவர் கருத்தாயிற்று.

கதைச் சுருக்கம்:  முல்லைத் திணையில் எழுதப்பட்ட இப்பாடலில் பாண்டிய மன்னன் போருக்குச் சென்றுள்ளான்.  கார்காலம் தொடங்குகின்றது.  அவன் மனைவி அவனுடைய வரவை எதிர்பார்த்து அரண்மனையில் காத்துக்கொண்டிருக்கின்றாள்.  பாசறையின் அமைப்பைப் பற்றின விவரங்களை அறிகின்றோம்.  அங்குள்ள யவனர், மிலேச்சர், பணிபுரியும் பெண்கள், நாழிகைக் கணக்கர், காவலர் ஆகியவர்களைப் பற்றியும் அறிகின்றோம். மன்னனின் மனநிலையைப் புலவர் சிறப்பாக விவரிக்கின்றார்.  இறுதியில் போரில் வெற்றி அடைந்து மன்னன் வீடு திரும்புகின்றான்.  அவன் வரும் முல்லை நிலத்தில் காயா, கொன்றை, காந்தள், கோடல் ஆகிய பூக்கள் மலர்ந்துள்ளன.  மான்கள் துள்ளி விளையாடுகின்றன.

No comments:

Post a Comment