Monday, 20 July 2020

பெரியபுராணம் - 20.07.2020

 

திருத்தொண்டர் புராணம் (பெரியபுராணம்)

திருச்சிற்றம்பலம்

147

கங்கையும் மதியும் பாம்பும் கடுக்கையும் முடி மேல் வைத்த 
அங்கணர் ஓலை காட்டி ஆண்டவர் தமக்கு நாடு 
மங்கையர் வதன சீத மதி இருமருங்கும் ஓடிச் 
செங்கயல் குழைகள் நாடும் திருமுனைப்பாடி நாடு .

1.5.1

148

பெருகிய நலத்தால் மிக்க பெரும் திரு நாடு தன்னில் 
அரு மறைச் சைவம் ஓங்க அருளினால் அவதரித்த 
மருவிய தவத்தால் மிக்க வளம்பதி வாய்மை குன்றாத் 
திரு மறையவர்கள் நீடும் திரு நாவலூராம் அன்றே.

1.5.2

149

மாதொ ஒரு பாகனார்க்கு வழி வழி அடிமை செய்யும் 
வேதியர் குலத்துள் தோன்றி மேம்படு சடையனார்க்(கு) 
ஏதமில் கற்பின் வாழ்க்கை மனை இசை ஞானியார்பால் 
தீதகன்று உலகம் உய்யத் திரு அவதாரம் செய்தார்.

1.5.3

150

தம்பிரான் அருளினாலே தவத்தினால் மிக்கோர் போற்றும், 
நம்பி ஆரூரர் என்றே நாமமும் சாற்றிமிக்க 
ஐம் படை சதங்கை சாத்தி அணிமணிச் சுட்டிச் சாத்தி 
செம் பொன் நாண் அரையில் மின்னத் தெருவில் தேர் உருட்டு நாளில்.

1.5.4

151

நர சிங்க முனையர் என்னும் நாடு வாழ் அரசர் கண்டு 
பரவருங் காதல்கூரப் பயந்தவர் தம்பால் சென்று 
விரவிய நண்பினாலே வேண்டினர் பெற்றுத் தங்கள் 
அரசிளங் குமரற்கு ஏற்ப அன்பினால் மகன்மை கொண்டார்.

1.5.5

152

பெருமைசால் அரசர் காதற் பிள்ளையாய்ப் பின்னும் தங்கள் 
வரு முறை மரபில் வைகி வளர்ந்து மங்கலம் செய் கோலத்து 
அரு மறை முந் நூல் சாத்தி அளவில் தொல் கலைகள் ஆய்ந்து 
திரு மலி சிறப்பின் ஓங்கிச் சீர் மணப் பருவஞ் சேர்ந்தார்.

1.5.6

153

தந்தையார் சடையனார் தம் தனித் திரு மகற்குச் சைவ 
அந்தணர் குலத்துள் தங்கள் அரும் பெரும் மரபுக்கு ஏற்ப 
வந்த தொல் சிறப்பிற் புத்தூர்ச் சடங்கவி மறையோன் தன்பால் 
செந் திரு அனைய கன்னி மணத் திறஞ் செப்பி விட்டார்.

1.5.7

154

குல முதல் அறிவின் மிக்கோர் கோத்திர முறையும் தேர்ந்தார் 
நல மிகு முதியோர் சொல்லச் சடங்கவி நன்மை ஏற்று 
மலர் தரு முகத்தன் ஆகி மணம் புரி செயலின் வாய்மை 
பலவுடன் பேசி ஒத்த பண்பினால் அன்பு நேர்ந்தான்

1.5.8

155

மற்றவன் இசைந்த வார்த்தை கேட்டவர் வள்ளல் தன்னைப் 
பெற்றவர் தம்பால் சென்று சொன்ன பின் பெருகு சிந்தை 
உற்றதோர் மகிழ்ச்சி எய்தி மண வினை உவந்து சாற்றிக் 
கொற்றவர் திருவுக்கு ஏற்பக் குறித்து நாள் ஓலை விட்டார்.


156

மங்கலம் பொலியச் செய்த மண வினை ஓலை ஏந்தி 
அங்கயற் கண்ணினாரும் ஆடவர் பலரும் ஈண்டிக் 
கொங்கலர்ச் சோலை மூதூர் குறுகினார் எதிரே வந்து 
பங்கய வதனி மாரும் மைந்தரும் பணிந்து கொண்டார்.


No comments:

Post a Comment