Thursday, 5 December 2024

ஆன்மிகமும் தமிழும்



 தமிழ் நெடுங்கணக்கின் ‘உயிர் எழுத்து’, ‘மெய் எழுத்து’ எனும் இருவிதப் பகுப்பே ஆன்மா - உடல் எனும் நுட்பமான ஆன்மிகப் பின்னணி கொண்டமைந்ததுதான். இதுபோன்ற ஆழ்பொருள் பொதிந்த பகுப்புமுறை சங்கத நெடுங்கணக்குக்கு அமையவில்லை.

‘தமிழ்’ என்பதை த்,அ,ம்,இ,ழ் என ஐந்தாக அலகிட்டு இன்னும் மிக நுட்பமாக உயோகுசார் பொருளுரைப்பார் திருவருட் பிரகாச வள்ளலார் சுவாமிகள்.

ஐந்திணைக் கடவுளரைப் பழந்தமிழர் போற்றினர்.
அபுநராவ்ருத்தியை வள்ளுவம் சொல்கிறது. தமிழர் இந்திரனுக்கு விழா எடுத்த விவரத்தைச் சிலம்பு சொல்கிறது. 

தமிழர் ஊனக் கண்ணுக்குப் புலனாகாத பிற உலகங்கள் இருப்பதை ஒப்புக்கொண்டனர். ’ஆனிலை மேல் உலகம்’ - கோலோகத்தை இலக்கியம் பேசுகிறது. 

அளறு - நரகத்தைக் குறிக்கும் தூய தமிழ்ச்சொல்.

’தொல்வினைப் பயன்றுய்ப்பத் துறக்கம்வேட் டெழுந்தாற்போல்......’ என சுவர்க்கத்தைக்  கலித்தொகை (118) சொல்லிற்று.  

இஷ்டம் - பூர்த்தம் எனும் மறை கூறும் மேலான அறங்களில் ஒன்றான ’பூர்த்தம்’ நீர்நிலைகளை அமைக்கச்  சொல்கிறது; பாண்டியன் நெடுஞ்செழியனுக்குக் குடபுலவியனார் உரைத்த அறவுரை -  

செல்லு முலகத்துச் செல்வம் வேண்டினும்,
ஞாலங் காவலர் தோள்வலி முருக்கி
ஒருநீ யாகல் வேண்டினும், சிறந்த
நல்லிசை நிறுத்தல் வேண்டினு மற்றதன்
தகுதி கேளினி மிகுதி யாள
நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே !
       - புறநானூறு

(’செல்லும் உலகத்துச் செல்வம்’ என்றது சுவர்க்க இன்பத்தைக் குறிப்பது)

தமிழர்  கோள்  நிலைகளால் ஏற்படும் விளைவுகளை நம்பினர். தொல் தமிழிலக்கியம் வேள்விகளைச் சொல்கிறது; இறை அவதாரங்களை விவரிக்கிறது. பக்தி இலக்கியம் தோன்றுமுன்னரே கடவுளர் ஆடிய கூத்துகளுக்குத்  தமிழில் தனியே பெயர்களும் இருந்துள்ளன. தொல் தமிழர்தம் நம்பிக்கை இந்துத்துவத்துக்கு முரணானதில்லை.

’மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் 
துறந்த ஒழுக்கம் கிழவற்கு இல்லை’ (133 களவியல்) 

'இன்றைக்கு என்ன நாள்? இப்பொழுது என்ன ஓரை?’ என்று நாள், கிழமை , சகுனம் பார்த்துக் கிளம்பும் வழக்கம் இருந்ததைத் தொல்காப்பியம் அழகாகச் சொல்கிறது. 

(ஓரை எனும் நீர் விளையாட்டோடு சேர்த்து இந்நூற்பாவின் பொருளைத் திரித்துக் கூறுவர்; ஆனால் கூடவே நாள் எனும் சொல்லும் இடம் பெற்றுள்ளது. ’நாள்’ எனும் தமிழ்ச் சொல் நக்ஷத்ரத்தைக் குறிப்பது. மலையாளத்தில் நட்சத்திரத்தை ’நாள்’ எனும் சொல்லால் சுட்டுவர். திருவிதாங்கோடு மன்னர்களைப் பெயர்கொண்டு சுட்டாமல் மூலந் திருநாள், சுவாதித் திருநாள் என அவரவர் நட்சத்திரம் கொண்டுதான் சொல்வார்கள்)

தெய்வ வழிபாடும், அதற்கான விழாக்களும் தொல் தமிழர் நாகரிகத்தில் முதன்மை பெற்றன; அறம் பேணவும், ஆலயம் பேணவும், விழாக்கள் செவ்வனே நடைபெறும் பொருட்டும் ஆடவர் இல் பிரிந்து சென்றனர் -
மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே
(தெய்விகக் கடமைகளுக்காக ஆடவர் இல்லத்தைப் பிரியலாம்)

மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய
முல்லை முதலாச் சொல்லிய முறையாற்
பிழைத்தது பிழையா தாகல் வேண்டியும்
இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவே.

( நால்வகை நிலத்தினும் மேவிய சிறப்பையுடைய மக்களையல்லாத தேவரது பூசையும் விழவும் முதலாயினவும், முல்லை-குறிஞ்சி-மருதம்-நெய்தல் எனச் சொல்லிய நிலத்தின் மக்கள் முறைமையில் தப்பியவழி தப்பாது அறம் நிறுத்தல் காரணமாகவும்,  ஒள்ளிய பொருள் தேடல் காரணமாகவும் ஆடவர் இல்லத்தை விட்டுப் பிரியலாம் )

(தொல்காப்பியம் அகத்திணையியல்)

தேவ பூசைக்குத் தமிழர் தந்த முதன்மைக்கு ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியத்தின் இச்சான்றுகளைக் காட்டிலும் பிறிது தேவையில்லை.

கண்ணன் ஏறு தழுவி மணந்ததாகத் தொல் தமிழ் இலக்கியம் சொல்லும்  முல்லை நில ஆயர் மங்கையான நப்பின்னையைத்தான் ஆழ்வார்களும், ஆண்டாளும் பாடினர்; தொல் தமிழின் அகத்துறையே  பாலேய் தமிழரான ஆழ்வார்களின் நாயிகா பாவப் பாசுரங்களுக்கு அடித்தளம் அமைத்துத் தந்தது. சங்க இலக்கியத்தின் மடலூர்தலைத் திருமங்கை மன்னரும் தாம் இறைவன்பால் கொண்ட உழுவலன்பின் வெளிப்பாடாக்கினார்; பெரிய திருமடல், சிறிய திருமடல் எனும் எழில்மிக்க தமிழ்ப் பனுவல் தொகுதிகள் இரண்டு மொழிக்கு வளம் சேர்க்கின்றன . அகத்துறையின் நீட்சியே ஆழ்வார் பனுவல்கள்.

’உருத்திரன்’ எனும் பெயரோடு பல சங்ககாலப் புலவர்கள். சிவபிரானைப்  பிறங்குநீர் சடைக்கரந்தான், காரியுண்டிக் கடவுள், விரி இணர்க்கொன்றையம் பைந்தார் அகலத்தன், நீல மேனி வாலிழைபாகத் தொருவன்,  மழுவாள் நெடியோன் என்பதான பல பெயர்கள் கொண்டு குறிப்பதோடு அந்த மகாசங்காரக் கடவுளை “கொலைவன்” எனவும் சொல்கிறது தொல் இலக்கியம் -
“கொலைவன் சூடிய குழவித் திங்கள் போல்”

வைணவத்துறை ஒப்பீடு போலவே சைவத்தின் பதினொன்றாம் திருமுறையின் பல அகத்துறைப் பாடல்களையும் சங்க இலக்கியத்தின் நீட்சியாகக் கொள்ளலாம்.

மதுரைக் காஞ்சி மறையவர் ஓதும் மறையொலியுடன் மதுரை மாநகரின் புலர்காலைப்பொழுது அமைவதாகக் கூறுகிறது. 

சமண நூலான சீவக சிந்தாமணி சாம வேதம் பற்றிய குறிப்பைத் தருகிறது –
”மாமகத் தெறியலான் மணிமிடற்றிடை கிடந்த
 சாமகீதமற்றுமொன்று சாமி நன்கு பாடினான்”

ஒருகால் பழந்தமிழர் பண்பாடுதான் இன்றைய இந்துத்துவத்துக்கு விதையாக அமைந்திருக்கலாம் எனவும் முடிவு செய்ய இடமுள்ளது.

தாண்டகம், எழுகூற்றிருக்கை, அந்தாதி, பிள்ளைத்தமிழ், உலா எனப் பல்வகையாலும் தமிழிலக்கியத்துக்கு வளம் சேர்த்தது பக்தி இலக்கியம். ஆதி உலாவான ‘திருக்கயிலாய ஞான உலா’ பின்னர் தமிழில் 60க்கும் மேற்பட்ட உலா நூல்கள் தோன்றக் காரணமானது. ‘திருப்புகழ்’ தரும் தாள வகைகளைப் பிற இசை மரபுகளில் காண முடியாது; மறைந்த இசை வித்தகி சுகுணா புருஷோத்தமன் அவர்கள் விளக்கமாகக் கூறியுள்ளார். ‘மல்லாரி’ எனும் இசைநடை மிக அபூர்வமானது; பல நாதசுரக் கலைஞர்கள் இணைந்து சுருதி பிசகாமல், நுட்பமான தாளக்கட்டுடன் இசைக்க வேண்டும்  - 


களப்பிரர் ஆட்சியாலும், சமணப் பரவலாலும் ஏறக்குறைய மறைந்தொழிந்த நிலையிலிருந்த  தமிழிசை சைவ சமய மறுமலர்ச்சி காரணமாகப் புத்துயிர் பெற்றது. திருக்குற்றால மலையின் வண்டுகள்கூடப் பேடையுடன் சேர்ந்து திளைத்த இன்பமிகுதியால் ‘செவ்வழி’ என்னும் பண்ணை ரீங்காரமிடுகின்றனவாம் -
’பெருந்தண்சாரல் வாழ்சிறைவண்டு பெடைபுல்கிக்
 குருந்தம்மேறிச் செவ்வழிபாடுங் குற்றாலம்...’
‘செவ்வழி’ முல்லைப் பண்ணாக இருக்கலாம். குற்றாலம் முல்லைத் திணை சார்ந்த பகுதி.

இறைவனை ‘ஏழிசையாய், இசைப்பயனாய்’ மக்கள் காணத் தொடங்கினர், சமய குரவர் செய்த பணியால்.

பக்தி இயக்கம் மொழிக்கு மட்டுமின்றி இன்று உலகோர் வியந்து பாராட்டும் தமிழரின் நுண்கலை வளர்ச்சிக்கும் வித்திட்டது.

சங்க இலக்கியம் ஆன்மிகம் பகிரத் தவறவில்லை; பக்தி இலக்கியம் சங்க இலக்கியத்தை ஒதுக்கவுமில்லை; ஆனால் இன்றைய பெரும்பான்மை அறிஞர்களுக்கு பக்தி இலக்கிய வளத்தை வெளிப்படுத்துவது கௌரவக் குறைவு.

ஏனோ கம்ப ராமாயணத்தை மட்டும் இன்றைய முற்போக்கு இலக்கியவாதிகளால் ஒதுக்க முடிவதில்லை; அதன் மொழி வளம், ஆசிரியரின் கற்பனைத் திறன் காரணமாகலாம்.
கற்றதனாலாய பயன் கண்ணன் நாமம் சொல்வதே என அறுதியிடுகிறது அருந்தமிழ் இலக்கியம்:

படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்கு தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா என்னா நாவென்ன நாவே  !
- இளங்கோவடிகளார்

சொற்பொருளாளீர் ! சொல்லுகேன் வம்மின், சூழ்புனற் 
     குடந்தையே தொழுமின்,
நற்பொருள் காண்மின், பாடி நீருய்ம்மின்,                      
      நாராயணா  என்னும் நாமம் !!
- திருமங்கையாழ்வார்

இன்னும் சொல்லப்போனால் தமிழ் பக்தி இலக்கியப் பாக்கள் பெரும்பான்மை இறைவனை ஏகவசனத்திலேயே சொல்வன; இறைவனை ஏகவசனத்தில் கட்டளையிட்டுத் தம்மைத் தொடர்ந்து வரக் கட்டளையிட்டார் ஓர் ஆழ்வார்; ஒரு பணியாள் போல் இறைவனும் மறு பேச்சின்றி அவரைப் பின் தொடர்ந்தான். சங்கதத் துதி நூல்களில்கூட அவ்வாறு அமையவில்லை.

சீர்திருத்தம் என்ற பெயரில், ‘ஐ’ எனும் அருமையான ஓரெழுத்தொருமொழியை அழிக்க வகை தேடியது மொழியறிவற்றோர் தலைமையில் இயங்கிய  தீராவிட இயக்கம். அதை நமக்கு மீட்டளித்தவர் ஆன்மிகவாதியான அமரர் வாரியார் சுவாமிகள். 

மொழியறிவோ, வரலாறோ அறியாதவர்களைத் தூண்டிவிட்டுத் திருகலாகிய சிந்தையை இளைஞரிடையே பரப்பும் போலிப் பகுத்தறிவு முயற்சிக்குப் பின்னணியாக இருப்போரின் நோக்கம் இந்தியர் ஒன்றுபட்டு விடக்கூடாது எனும் குறுகிய நோக்கம் தவிர மற்றொன்றில்லை.

அறிவாளிகளான தமிழர் தம் வாழ்வில் உலகாயத, நாத்திகக் கருத்தியல்களுக்கு இடமளிக்காமல் வாழ்ந்தனர் என்பதே வரலாறு. 

தமிழில் ‘காவி’ உண்டா? காவிக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம் என வினவுகிறது ஒரு தற்குறி.

முல்லைப்பாட்டு காவிக்கல் பொடியில் தோய்த்த கல்லாடையைச் சொல்கிறது. சங்ககால முக்கோற் பகவர் இத்தகைய ஆடை உடுத்தினர். கல்லாடையைத் தேவாரமும் சொல்கிறது. காவியாடையை ’செங்கற் பொடிக்கூரை’ என்பார் நாச்சியார்.

பக்தி எனும் குளிர்பதனப் பெட்டியால் பைந்தமிழ் பாதுகாப்புப் பெறுகிறது என்பதே மாறாத உண்மை.

தமிழர் மனத்தில் ஊறிவிட்ட நச்சுக் கருத்துகள் நீங்கி, நற்சிந்தனைகள் ஓங்க இறைவன் நல்லருள் நல்குவானாக!