பண்பாட்டு மானிடவியல்
சமூக பண்பாட்டு மானிடவியல் எனவும் அழைக்கப்படும் பண்பாட்டு மானிடவியல் (Cultural anthropology), பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட நான்கு மானிடவியல் துறைகளுள் ஒன்றாகும். ஓரளவுக்கு இது, "பண்பாடு" "இயற்கை" என்னும் இரண்டுக்குமிடையிலான எதிர்த் தன்மையை அடிப்படையாகக் கொண்டு முன்னர் எழுந்த மேலை நாட்டு எழுத்தாக்கங்களுக்கு எதிரான விளைவு எனலாம். மேற்சொன்ன அடிப்படையில் சில மனிதர்கள் "இயற்கை நிலையில்" வாழ்வதாகக் கொள்ளப்பட்டது. மானிடவியலாளர்களோ பண்பாடு என்பது "மனித இயற்கை" என வாதிடுகின்றனர். அத்துடன், எல்லா மக்களும் தங்கள் அனுபவங்களை வகைப்படுத்தவும், அவ் வகைப்பாடுகளைக் குறியீட்டு அடிப்படையில் ஆக்கிக்கொள்ளவும், அத்தகைய குறியீட்டு வடிவங்களை மற்றவர்களுக்குக் கற்பிக்கவும் தகுதி உள்ளவர்களாக இருக்கின்றார்கள் என்கின்றனர் அவர்கள். பண்பாடு என்பது கற்றுக்கொள்ளப்படுவதால் வெவ்வேறு இடங்களில் வாழ்பவர்கள் வெவ்வேறு பண்பாடுகளை உடையவர்களாக இருக்கிறார்கள். பண்பாட்டினூடாகப் பரம்பரையியல் முறைகளுக்குப் புறம்பாக மக்கள் தாங்கள் வாழுமிடங்களுக்கு ஏற்புடையவர்களாகத் தங்களை ஆக்கிக் கொள்கிறார்கள் என்றும் அதனால் வெவ்வேறு சூழல்களில் வாழுகின்ற மக்கள் மாறுபட்ட பண்பாடுகளை உடையவர்களாக உள்ளார்கள் என்றும் மனிதவியலாளர்கள் எடுத்துக்காட்டுகிறார்கள். பெரும்பாலான மனிதவியற் கோட்பாடுகள் "இடஞ்சார்ந்த" மற்றும் "உலகம் தழுவிய" நிலைப்பாடுகளுக்கிடையேயான இழுநிலைபற்றிய மதிப்பீடு மற்றும் ஆர்வம் காரணமாகத் தூண்டப்பட்டவையே.
மனிதவியலாளர், எல்லா மனித சமூகங்களும் ஒரே கட்டங்களினூடாக அதே ஒழுங்கில் வளர்ச்சியடைகின்றன என்னும் கருத்தைப் பெரும்பாலும் நிராகரிக்கின்றனர். ஜூலியன் ஸ்டெவார்ட் (Julian Steward) போன்ற சில 20 ஆம் நூற்றாண்டின் இன ஒப்பாய்வியலாளர், ஒரே மாதிரியான சூழலில் ஒரேமாதிரியாகப் பழக்கப்படுவதாலேயே இவ்வாறான ஒருமைத் தன்மை உண்டாகின்றது என்கின்றனர்.
19 ஆம் நூற்றாண்டின் இன ஒப்பியலாய்வாளர்கள் "பரவுகை" மற்றும் "சுதந்திரப் புத்தாக்கம்" என்பவற்றை பரஸ்பர தவிர்ப்புத் தன்மையையும், எதிர்ப்புத் தன்மையும் கொண்ட கோட்பாடுகளாகப் பார்த்த போதிலும், பெரும்பாலான இனவரைவியலாளர், இரண்டு நடைமுறைகளுமே நடைபெறுகின்றனவென்றும், இரண்டுமே பண்பாட்டிடை ஒற்றுமைத் தன்மைகளுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கங்களே என்றும் ஒருமித்த கருத்தை எட்டினர். ஆனாலும், இத்தகைய ஒற்றுமைத் தன்மைகள் பெரும்பாலும் மேலோட்டமானவையே என்றும், சுவறுதல் (diffusion) மூலம் பரவும் கூறுகள் விடயத்தில் கூட, ஒரு சமூகத்திலிருந்து இன்னொரு சமூகத்துக்குச் செல்லும்போது அவற்றின் பொருளும் செயற்பாடுகளும் மாறிவிடுகின்றன என்றும் சுட்டிக் காட்டினர்.