நற்றிணை
நற்றிணை என்னும் இந்நூல் தனிப்பாடல்களாக பலராலும் பாடப்பட்டு பின்னர் தொகுக்கப்பட்டது. இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். எட்டுத்தொகை நூல்கள் இவையெனப் பாடும் வெண்பாவால் முதலிடம் பெற்றுத்திகழ்வது நற்றிணை ஆகும். நல் என்ற அடைமொழி பெற்றது. இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர். இந்நூல் 9 அடி முதல் 12 அடிகள் வரை அமைந்த கடவுள் வாழ்த்தோடு 401 பாடல்களைக் கொண்டது. இந்நூலைத் தொகுத்தவர் யாரெனத் தெரியவில்லை. தொகுப்பித்தவன் "பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி" ஆவான். நற்றிணைப் பாடல்கள் அகப்பொருள் பாடல்களாம்.
பாடியோர்
நற்றிணையில் உள்ள 401 பாடல்களை 187 புலவர்கள் பாடியுள்ளனர்.குறுந்தொகைப் புலவர்கள் போலவே நற்றிணைப் புலவர்களும் பாடல் தொடர்களால் பெயர் பெற்றுள்ளனர். அவர்கள் - வண்ணப்புறக் கந்தத்தனார், மலையனார், தனிமகனார், விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார், தும்பிசேர்க்கீரனார், தேய்புரிப் பழங்கயிற்றினார், மடல் பாடிய மாதங்கீரனார் என்ற எழுவராவர். மேலும் 59 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் காணப்படவில்லை. இதில் உள்ள நானூறு பாடல்களில் 234ஆம் பாடலும் 385ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிட்டவில்லை. திணை அடிப்படையில் பார்க்கும்போது குறிஞ்சித் திணைப் பாடல்கள் 130, பாலைப் பாடல்கள் 107, நெய்தல் படல்கள் 101, மருதப் பாடல்கள் 33, முல்லைப் பாடல்கள் 28 அமைந்துள்ளன.
துறைவிளக்கம்
இந்நூல் என்றும் நின்று நிலவ வேண்டிக் கடவுளை வாழ்த்துவான் எடுத்துக்கொண்ட ஆசிரியர், மாயோனே வேதமுதல்வனென ஆன்றோர் கூறுவராதலின், யாமும் அவனையே வணங்குவோமென்று வாழ்த்துக் கூறாநிற்பது.
“பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே
நாடுங் காலை நாலிரண் டுடைத்தே” (தொல். பாடாண் 80)
எனப் பெறப்பட்ட கடவுள் வாழ்த்து வகை முதலிய எட்டு வகையினுள் இது கடவுள் வாழ்த்து என்னும் வகையினுள் அடங்கும்.
“வாழ்த்தியல் வகையே நாற்பாக்கும் உரித்தே” என்னும் விதிபற்றி ஆசிரியர் பாரதம் பாடிய பெருந்தேவனார் இந்நூற்கு ஆசிரியப் பாவாற் கடவுள் வாழ்த்துக் கூறுவாராயினர் என்க. இஃது உலகிற்குப் பயன்பட இறைவனைப்படர்க்கையில் வைத்து வாழ்த்தியபடியாம்.
பாடல்
மாநிலஞ் சேவடி யாக தூநீர்
வளைநரல் பெளவம் உடுக்கை யாக
விசும்புமெய் யாக திசைகை யாக
பசுங்கதிர் மதியோடு சுடர்கண் ணாக
இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய
வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிரி யோனே.
புலவர் - பாரதம் பாடிய பெருந்தேவனார்.