Tuesday, 26 February 2019

பாடல்கள் – 6, 9, 37, 51, 110, 111, 113, 114, 116.
கலித்தொகை 6, பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை, தலைவி தலைவனிடம் சொன்னது
மரையா மரல் கவர மாரி வறப்ப
வரை ஓங்கு அருஞ் சுரத்து ஆர் இடைச் செல்வோர்
சுரை அம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர் தம்
உள் நீர் வறப்பப் புலர் வாடு நாவிற்குத்
தண்ணீர் பெறாஅத் தடுமாற்று அருந் துயரம் 5
கண்ணீர் நனைக்கும் கடுமைய காடு என்றால்
என் நீர் அறியாதீர் போல இவை கூறல்
நின் நீர அல்ல நெடுந்தகாய் எம்மையும்
அன்பு அறச் சூழாதே ஆற்று இடை நும்மொடு
துன்பம் துணை ஆக நாடின் அது அல்லது 10
இன்பமும் உண்டோ எமக்கு.
பொருளுரை: காட்டுப் பசுவானது உண்ண வேறு உணவு எதுவும் இல்லாததால் மரல் செடியை உண்ணுமாறு, மழை இல்லாது வறண்டு போக, மலை ஓங்கிய அரிய வழியில் செல்வபவர்கள், ஆறலைக் கள்வர்களின் சுரைப் பொருந்திய அம்புகள் தங்கள் உடலைத் தைத்ததால், வருந்தி, நீர் வற்றி வறண்டு வருந்தும் நாவிற்கு நீர் பெற முடியாத சூழ்நிலையில் தம் கண்ணீரால் நாவின் வறட்சியை நீக்கிப் போக்கும் கொடுமையான காடு என்று காரணம் காட்டி என்னை விட்டுப் பிரிய நீர் நினைத்தீர் ஆயின், என்னை நீர் அறியாதவர் போல் இவற்றைக் கூறுகின்றீர்.  இவை நன்றாகிய தன்மை உடையவை அல்ல, ஐயா.  அன்பு நீங்க பிரிதலைக் கருதாது, உம்முடன் வழியில் துன்பத்திற்குத் துணையாக நான் வர விரும்புகின்றேன். அதைவிட வேறு இன்பம் எனக்கு உண்டா?
குறிப்பு:  சுரை = அம்பின் தலைப்பகுதி.
சொற்பொருள்:  மரையா மரல் கவர – காட்டுப் பசு மரலை உண்ண, மாரி வறப்ப – மழை வறண்டு போக, வரை ஓங்கு அருஞ் சுரத்து ஆர் இடைச் செல்வோர் – மலை ஓங்கிய அரிய வழியில் செல்பவர்கள், சுரை அம்பு மூழ்க – சுரையுடன் கூடிய அம்புகள் உடம்பில் தைக்க, சுருங்கி – சுருங்கி, புரையோர் – ஆறலை கள்வர்கள், தம் உள் நீர் வறப்ப – உள்ளுண்டாகிய நீர் வற்ற, புலர் வாடு நாவிற்குத் தண்ணீர் பெறாஅ – வறண்டு வருந்தும் நாவிற்கு நீர் பெற முடியாத, தடுமாற்று அருந்துயரம் – மனத் தடுமாற்றத்தையுடைய கண்ணீர், நனைக்கும் – கண்ணீர் நனைக்கும், கடுமைய காடு என்றால் – கொடுமையான காடு என்றால், என் நீர் அறியாதீர் போல இவை கூறல் – என்னை நீர் அறியாதவர் போல் இவற்றைக் கூறுதல், நின் நீர அல்ல – இவை நன்றாகிய தன்மை உடையவை அல்ல, நெடுந்தகாய் – தலைவனே, எம்மையும் அன்பு அறச் சூழாதே – அன்பு நீங்க பிரிதலைக் கருதாது, ஆற்று இடை நும்மொடு துன்பம் துணை ஆக நாடின் – உன்னுடன் வழியில் துன்பத்திற்கு துணையாக வர விரும்பினால், அது அல்லது இன்பமும் உண்டோ எமக்கு – அதை விட வேறு இன்பம் எனக்கு உண்டா
கலித்தொகை 9, பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை, தலைவியின் செவிலித்தாயும் வைணவத் துறவியும் சொன்னது
செவிலித்தாய் வைணவத் துறவியிடமும் அவருடைய மாணாக்களிடமும் சொன்னது :
எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்
உறித் தாழ்ந்த கரகமும் உரை சான்ற முக்கோலும்
நெறிப்பட சுவல் அசைஇ, வேறு ஓரா நெஞ்சத்துக்
குறிப்பு ஏவல் செயல் மாலைக் கொளை நடை அந்தணீர்!
வெவ் இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர் இவ் இடை  5
என் மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும்
தம் உளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்
அன்னார் இருவரை காணிரோ பெரும?
வைணவத் துறவி:
காணேம் அல்லேம்!  கண்டனம்!  கடத்து இடை
ஆண் எழில் அண்ணலோடு அருஞ் சுரம் முன்னிய,  10
மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறிர்!
பல உறு நறும் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,
மலை உளே பிறப்பினும் மலைக்கு அவை தாம் என் செய்யும்?
நினையுங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
சீர்கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை,  15
நீர் உளே பிறப்பினும் நீர்க்கு அவை தாம் என் செய்யும்?
தேருங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை,
யாழ் உளே பிறப்பினும் யாழ்க்கு அவை தாம் என் செய்யும்?
சூழுங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!  20
என, ஆங்கு
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்!
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்,
அறம் தலை பிரியா ஆறும் மற்று அதுவே.
பொருளுரை:
செவிலித்தாய்: காயும் ஞாயிற்றின் கதிர்களின் வெட்பத்தைத் தாங்கி நிழலைத் தரும் குடைகளை கைகளில் ஏந்தி, உறியில் தொங்கும் தண்ணீர்க் கமண்டலத்தையும் முக்கோலையும் முறைப்பட தோளில் சுமந்து, இறைவனைத் தவிர வேறு எதையும் எண்ணாத நெஞ்சத்துடன், ஐம்பொறிகளும் நீங்கள் ஏவிய வழியில் நடப்பதை முறையாகப் பெற்ற அந்தணர்களே! வெட்பம் மிகுந்த காட்டு வழியில் செல்லும் சிறந்த ஒழுக்கத்தை உடையவர்களே!
ஐயா! பிறர் அறியாமல் இணைந்த என் மகளும் ஒருத்தியின் மகனும், பிறர் அறிந்ததால் இந்தப் பாதையில் செல்லுவதை கண்டீர்களா?
வைணவத் துறவி: நாங்கள் காணாது இருக்கவில்லை. கண்டோம். அழகான சிறந்த ஆணுடன் கடுமையான காட்டு வழியில் செல்லும் அழகிய அணிகளை அணிந்த இளம் பெண்ணின் தாயாக இருப்பீர் போலும்,
பல மணங்களையுடைய நறுமணம் கொண்ட சந்தனமானது உபயோகிப்பவர்களுக்குப் பயன் கொடுப்பது அல்லாது, தான் பிறந்த மலைக்கு எந்த வகையில் பயன்படும்? நினைத்துப் பார்த்தால் உன் மகளுக்கும் உனக்கும் உள்ள உறவு அத்தகையதே,
சிறப்பு மிகுந்த வெள்ளை முத்துக்கள் அணிபவர்களுக்கு அழகைக் கொடுப்பது அல்லாது, தாம் பிறந்த கடலுக்கு எந்த வகையில் பயன்படும்? நினைத்துப் பார்த்தால் உன் மகளுக்கும் உனக்கும் உள்ள உறவு அத்தகையதே
ஏழு நரம்புகளில் எழும் இனிய இசை, இசைப்பவர்களுக்கு அல்லாது, யாழில் பிறந்தாலும் யாழ்க்கு எந்த வகையில் பயன்படும்? நினைத்துப் பார்த்தால் உன் மகளுக்கும் உனக்கும் உள்ள உறவு அத்தகையதே
ஆதலால், சிறந்த கற்பு நெறியை மேற்கொண்டு, தலைசிறந்த ஒருவனை ஏற்றுக் கொண்டு சென்ற உன் மகளை எண்ணி நீ வருந்தாதே! அவள் சென்ற வழி அறத்தொடு ஒத்தது ஆகும்!
குறிப்பு: முக்கோல் என்பது முத்தண்டு.  திரிதண்டம் என்றும் கூறப்படும்.  மூன்று கோல்களை இணைத்துக்  கட்டிய இதனை வைணவத் துறவிகள் (முக்கோல் பகவர், திரிதண்டி) கையில் வைத்திருப்பார்கள். முக்கோல் பகவர் என்பவர்கள் ‘உள்ளம், மெய், நா’ ஆகியவற்றை அடக்கியவர்கள்.  கலித்தொகை 126 – முக்கோல் கொள் அந்தணர், முல்லைப்பாட்டு 38 – கல் தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான் முக்கோல். நச்சினார்க்கினியர் உரை – ‘அரி, அயன், அரன் என்னும் மூவரும் ஒருவர் என்று சொல்லுதல் தன்னிடத்தே அமைந்த முக்கோல்’.
சொற்பொருள்:  எறித்தரு கதிர் தாங்கி – காயும் ஞாயிற்றின் கதிர்களின் வெட்பத்தைத் தாங்கி, ஏந்திய குடை – பிடித்த குடை, நீழல் – நிழல், உறித் தாழ்ந்த கரகமும் – உறியில் தங்கிய கமண்டலமும், உரை சான்ற முக்கோலும் புகழ் பெற்ற திரிதண்டமும், நெறிப்படச் சுவல் அசைஇ – முறைப்படத் தோளில் வைத்து, வேறு ஓரா நெஞ்சத்து – இறைவனைத் தவிர வேறு எதையும் எண்ணாத நெஞ்சத்துடன், குறிப்பு ஏவல் செயல் மாலைக் கொளை நடை அந்தணீர்- ஐம்பொறிகளும் நீங்கள் ஏவிய வழியில் நடப்பதை முறையாகப் பெற்ற அந்தணர்களே, வெவ் இடைச் செலல் – வெட்பம் மிகுந்த காட்டு வழியில் செல்லுதல், மாலை ஒழுக்கத்தீர் – சிறந்த ஒழுக்கத்தை உடையவர்களே, இவ் இடை – இந்தப் பாதையில், என் மகள் ஒருத்தியும் – என் மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும் – வேறு பெண்ணின் மகன் ஒருவனும், தம் உளே புணர்ந்த – பிறர் அறியாமல் தாங்கள் இணைந்த, தாம் – அவர்கள், அறி புணர்ச்சியர் – அவர்களுடையப் புணர்ச்சி பிறரால் அறியப்பட்டது, அன்னார் இருவரை காணிரோ – அவர்கள் இருவரையும் கண்டீர்களா, பெரும – ஐயா (பெரும – நச்சினார்க்கினியர் உரை – பெரும என்றாள், அவர்கள் ஆசிரியனாக பெரியோனை),
காணேம் அல்லேம் – நாங்கள் காணாது இருக்கவில்லை, கண்டனம் – கண்டோம், கடத்து இடை  – காட்டில், ஆண் எழில் அண்ணலோடு – அழகான சிறந்த ஆணுடன், அருஞ் சுரம் முன்னிய – கடுமையான காட்டு வழியில் செல்லும், மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறிர் – நீங்கள் அழகிய அணிகளை அணிந்த இளம் பெண்ணின் தாயாக இருப்பீர் போலும்,
பல உறு நறும் சாந்தம் – பல மணங்களையுடைய நறுமணமானச் சந்தனம்,  படுப்பவர்க்கு அல்லதை – உபயோகிப்பவர்களுக்கு அல்லாமல், மலை உளே பிறப்பினும் – மலையில் பிறந்தாலும், மலைக்கு அவை தாம் என் செய்யும் – மலைக்கு எந்த வகையில் பயன்படும், நினையுங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே – நினைத்துப் பார்த்தால் உன் மகளுக்கும் உனக்கும் உள்ள உறவு அத்தகையதே,
சீர்கெழு – சிறப்பு மிகுந்த, வெண் முத்தம் – வெள்ளை முத்துக்கள், அணிபவர்க்கு அல்லதை – அணிபவர்களுக்கு இல்லாமல், நீர் உளே பிறப்பினும் – கடல் நீரில் பிறந்தாலும், நீர்க்கு அவை தாம் என் செய்யும் – கடலுக்கு எந்த வகையில் பயன்படும், தேருங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே – நினைத்துப் பார்த்தால் உன் மகளுக்கும் உனக்கும் உள்ள உறவு அத்தகையதே,
ஏழ் புணர் – ஏழு நரம்புகளில் எழும் இசை, இன் இசை – இனிமையான இசை, முரல்பவர்க்கு அல்லதை – இசைப்பவர்களுக்கு அல்லாது, யாழ் உளே பிறப்பினும் – யாழில் பிறந்தாலும், யாழ்க்கு அவை தாம் என் செய்யும் – யாழ்க்கு எந்த வகையில் பயன்படும், சூழுங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே – நினைத்துப் பார்த்தால் உன் மகளுக்கும் உனக்கும் உள்ள உறவு அத்தகையதே,
என – என்று, ஆங்கு – எங்கு, இறந்த கற்பினாட்கு – கற்பு நெறியை மேற்கொண்டவளுக்கு,  எவ்வம் படரன்மின் – வருந்தாதே, சிறந்தானை வழிபடீஇச் சென்றனள் – தலைசிறந்த ஒருவனை ஏற்றுக் கொண்டு சென்றுள்ளாள், அறம் தலை பிரியா ஆறும் மற்று அதுவே – அவள் சென்ற வழி அறத்தொடு ஒத்தது ஆகும்
கலித்தொகை 37, கபிலர்குறிஞ்சிதலைவி தோழியிடம் சொன்னது
கய மலர் உண்கண்ணாய்! காணாய்! ஒருவன்
வய மான் அடித் தேர்வான் போலத் தொடை மாண்ட
கண்ணியன் வில்லன் வரும் என்னை நோக்குபு,
முன்னத்தின் காட்டுதல் அல்லது தான் உற்ற
நோய் உரைக்கல்லான் பெயரும் மன் பல் நாளும்,  5
பாயல் பெறேஎன் படர் கூர்ந்து அவன் வயின்
சேயேன் மன் யானும் துயர் உழப்பேன், ஆயிடைக்
கண் நின்று கூறுதல் ஆற்றான் அவன், ஆயின்
பெண் அன்று உரைத்தல் நமக்கு ஆயின் இன்னதூஉம்
காணான் கழிதலும் உண்டு என்று, ஒரு நாள் என் 10
தோள் நெகிழ்பு உற்ற துயரால் துணிதந்து, ஓர்
நாண் இன்மை செய்தேன், நறு நுதால், ஏனல்
இனக் கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல்
ஊசல் ஊர்ந்து ஆட ஒரு ஞான்று, வந்தானை,
“ஐய சிறிது என்னை ஊக்கி” எனக் கூறத்  15
“தையால் நன்று” என்று அவன் ஊக்கக் கை நெகிழ்பு
பொய்யாக வீழ்ந்தேன் அவன் மார்பில், வாய்யாச் செத்து
ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான், மேல்
மெய் அறியாதேன் போல் கிடந்தேன் மன், ஆயிடை
மெய் அறிந்து ஏற்று எழுவேன் ஆயின், மற்று ஒய்யென  20
ஒண் குழாய் செல்க எனக் கூறி விடும் பண்பின்
அங்கண் உடையன் அவன்.
பொருளுரை:   குளத்தில் உள்ள குவளை மலர்போலும் மைதீட்டிய கண்களை உடைய என் தோழியே! நான் கூறுவதைக் கேட்பாயாக! வில்லைத் தன் கையில் ஏந்திய, மாட்சிமைப்பட்ட மலர்ச்சரத்தை அணிந்த ஒருவன், வலிமையான விலங்கின் காலடியைத் தேடுபவன் போல் வந்து, என்னை நோக்கி, அவனுடைய குறிப்பால் காட்டுவது அன்றி, என் மேல் தான் உற்ற காதல் நோயைப் பற்றிக் கூறாமல் சென்றான், பல நாட்களாக. நான் உறக்கம் பெறாமல் வருத்தம் அடைந்தேன். அவனுடன் உறவில்லாத நான் பெரும் வருத்தத்தில் ஆழ்ந்தேன்.  என் முன்னால் வந்து தன்னுடைய மனதில் உள்ளதைக் கூற முடியாதவன் அவன். என்னுடைய உணர்வுகளைக் கூறுவது பெண்மைத் தன்மை உடையது இல்லை.  ஆனால் அவன் என்னுடைய உணர்வை அறியாமல் போய் விடுவானோ என்று எண்ணி, ஒரு நாள், என் தோள்கள் மெலிந்து நான் உற்ற வருத்தத்தால், துணிவுடன், நாணம் இல்லாத செயல் ஒன்றை நான் செய்தேன், நறுமணமான நெற்றியையுடைய என் தோழியே. கிளிகளை விரட்டி நாம் காக்கும் தினைப் புனத்திற்கு அருகில் உள்ள ஊஞ்சலில் நான் ஆடிக் கொண்டிருந்தேன்.  அப்பொழுது அங்கு வந்த அவனை நோக்கி, “ஐயா! என்னைக் கொஞ்சம் ஆட்டு என்று நான் கூற, “பெண்ணே! நல்லது” என்று அவன் ஊஞ்சலை ஆட்ட, கை நழுவியது போல் நான் நடித்து அவன் மார்பில் பொய்யாக வீழ்ந்தேன்.  அது உண்மை என்று எண்ணி, அவன் என்னை வாரி எடுத்து அணைத்துக் கொண்டான்.  அங்கு நான் அறியாதவள் போல் கிடந்தேன்.  நான் என்னுடைய மயக்கம் தீர்த்தாற்போல் எழுவேன் ஆயின், விரைந்து ‘ஒளியுடைய அணிகலன்களை அணிந்தவளே! எழுந்து செல்” என்று கூறும் பண்புடையவன் அவன்.
சொற்பொருள்: கய மலர் – குளத்தில் உள்ள மலர்கள், உண்கண்ணாய் – மையிட்ட கண்களை உடையாய், காணாய் – காண்பாயாக, ஒருவன் – ஒருவன், வய மான் அடித் தேர்வான் போல – வலிமையான விலங்கின் அடியைத் தேடுபவன் போல், தொடை – தொடுத்த, மாண்ட கண்ணியன் – மாட்சிமைப்பட்ட மலர்ச் சரத்தை அணிந்தவன், வில்லன் – வில்லைக் கையில் கொண்டவன், வரும் என்னை நோக்குபு – வந்து என்னை நோக்கி, முன்னத்தின் காட்டுதல் அல்லது – குறிப்பால் காட்டுவது அன்றி, தான் உற்ற நோய் உரைக்கல்லான் பெயரும் – தான் உற்ற காதல் நோயைப் பற்றி அவன் கூறாமல் செல்வான், மன் – ஓர் அசை, பல் நாளும் – பல நாட்கள், பாயல் பெறேஎன் படர் கூர்ந்து – உறக்கம் பெறாமல் வருத்தம் அடைந்து, அவன் வயின் சேயேன் – அவனுடன் உறவில்லாத நான், மன் – ஓர் அசை, யானும் துயர் உழப்பேன் – நானும் வருத்தத்தில் ஆழ்வேன், ஆயிடைக் கண் நின்று கூறுதல் ஆற்றான் அவன் – அங்கு என் முன்னால் வந்து வந்து தன்னுடைய மனதில் உள்ளதைக் கூற முடியாதவன் அவன், ஆயின் பெண் அன்று உரைத்தல் நமக்கு – பெண்ணின் தன்மை இல்லை என் வருத்தத்தைக் கூற, ஆயின் இன்னதூஉம் காணான் கழிதலும் உண்டு என்று – ஆனால் அவன் என்னுடைய உணர்வை அறியாமல் போய் விடுவானோ என்று, ஒரு நாள் – ஒரு நாள், என் தோள் நெகிழ்பு உற்ற துயரால் – என் தோளை மெலியச் செய்த துயரத்தால், துணிதந்து ஓர் நாண் இன்மை செய்தேன் – துணிவுடன் நாணம் இல்லாத செயலை நான் செய்தேன், நறு நுதால் – நறுமணமான நெற்றியையுடைய என் தோழியே, ஏனல் இனக் கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல் – கிளிகளை விரட்டி நாம் காக்கும் தினைப் புனத்திற்கு அருகில், ஊசல் ஊர்ந்து ஆட – நான் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தேன், ஒரு ஞான்று வந்தானை – அப்பொழுது அங்கு வந்தவனை, ஐய சிறிது என்னை ஊக்கி எனக் கூற – ஐயா!  என்னைக் கொஞ்சம் ஆட்டு என்று நான் கூற, தையால் நன்று என்று அவன் ஊக்க – பெண்ணே! நல்லது என்று அவன் ஊஞ்சலை ஆட்ட, கை நெகிழ்பு பொய்யாக வீழ்ந்தேன் அவன் மார்பில் – கை நழுவியது போல் நான் நடித்து அவன் மார்பில் பொய்யாக வீழ்ந்தேன், வாய்யாச் செத்து ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான் – அது உண்மை என்று எண்ணி என்னை வாரி எடுத்து அணைத்துக் கொண்டான், மேல் மெய் அறியாதேன் போல் கிடந்தேன் – அங்கு நான் அறியாதவள் போல் கிடந்தேன், மன் – ஓர் அசை, ஆயிடை மெய் அறிந்து ஏற்று எழுவேன் ஆயின் – நான் என்னுடைய மயக்கம் தீர்த்தாற்போல் எழுவேன் ஆயின், மற்று ஒய்யென ஒண் குழாய் செல்க எனக் கூறி விடும் பண்பின் அங்கண் உடையன் அவன் – அதன் பின் அவன் விரைவில் ‘ஒளியுடைய அணிகலன்களை அணிந்தவளே! எழுந்து செல்வாயாக’ என்று கூறும் பண்புடையவன் அவன்
கலித்தொகை 51, கபிலர், குறிஞ்சி, தலைவி தோழியிடம் சொன்னது
சுடர் தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும்
மணல் சிற்றில் காலின் சிதையா அடைச்சிய
கோதை பரிந்து வரிப் பந்து கொண்டு ஓடி
நோதக்க செய்யும் சிறு பட்டி, மேல் ஓர் நாள்,
அன்னையும் யானும் இருந்தேமா, “இல்லிரே  5
உண்ணு நீர் வேட்டேன்” என வந்தாற்கு அன்னை
“அடர் பொன் சிரகத்தால் வாக்கிச் சுடர் இழாய்
உண்ணு நீர் ஊட்டி வா” என்றாள் என, யானும்
தன்னை அறியாது சென்றேன், மற்று என்னை
வளை முன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு  10
“அன்னாய் இவன் ஒருவன் செய்தது காண்” என்றேனா,
அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்
“உண்ணு நீர் விக்கினான்” என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்
கடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகை கூட்டம்  15
செய்தான் அக் கள்வன் மகன்.
பொருளுரை:  ஒளியுடைய வளையல்களை அணிந்த என் தோழியே!  இதைக் கேட்பாயாக! முன்பு நம்முடைய சிறிய மணல் வீடுகளை உடைத்தும், நாம் சூடியிருந்த மலர்ச்சரத்தை அறுத்தும், நம்முடைய வரிப்பந்தை எடுத்துக் கொண்டும் ஓடி நோவுதலைச் செய்த பொறுப்பற்றவன், ஒரு நாள் என் தாயும் நானும் வீட்டிலிருந்த பொழுது வந்து, “வீட்டில் உள்ளவர்களே! நான் தாகத்தில் இருக்கின்றேன். எனக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுங்கள்” என்று கேட்டான். என்னுடைய தாய், “ஒளியுடைய அணிகலன்களை அணிந்தவளே! அடர்ந்த பொன்னினால் செய்த கிண்ணத்தில் தண்ணீர் வார்த்து  அவனுக்குக் கொடு” என்றாள். அவன் யார் என்பதை அறியாமல் நான் அவனிடம் சென்றேன். வளையல் அணிந்த என் முன் கையைப் பற்றி என்னை வருத்தினான் அவன். “அம்மா! இவன் செய்ததைப் பார்” என்று நான் கலக்கத்துடன் கூறினேன்.  என் தாய் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடி வந்தாள். அவள் அங்கு வந்தவுடன் “நீர் குடிக்கும் பொழுது விக்கினான்” என்று கூறினேன்.  என் தாய் அவனுடைய முதுகைத் தடவிக் கொடுத்தாள்.  தன் கடைக்கண்ணால் என்னைக் கொல்லுவது போல் என்னைப் பார்த்து நட்புடன் சிரித்தான், அந்தக் கள்வன்.
குறிப்பு: வரிப் பந்து (3) –  நச்சினார்க்கினியர் உரை – வரியினையுடைய பந்து.  திருமுருகாற்றுப்படை 68  – வரிப் புனை பந்து – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்து,  நச்சினார்க்கினியர் உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்து,  வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி  உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்து.  பெரும்பாணாற்றுப்படை 333 – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நூலால் வரியப்பட்ட பந்து, நச்சினார்க்கினியர் உரை – நூலால் வரிதலையுடைய பந்து, வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை – நூலால் வரிதலையுடைய பந்து.
சொற்பொருள்:   சுடர் தொடீஇ – ஒளியுடைய வளையல்களை அணிந்தவளே, கேளாய் – கேட்பாயாக, தெருவில் – தெருவில், நாம் ஆடும் – நாம் விளையாடும், மணல் சிற்றில் – சிறிய மணல் வீடு, காலின் சிதையா – காலினால் சிதைத்து, அடைச்சிய கோதை – சூடியிருந்த மலர்ச் சரத்தை, பரிந்து – அறுத்து, வரிப் பந்து கொண்டு ஓடி – வரிகளையுடைய பந்தை எடுத்துக் கொண்டு ஓடி, நோதக்க செய்யும் சிறு பட்டி – நோவுதலைச் செய்யம் பொறுப்பற்றவன், மேல் ஓர் நாள் – முன்னொரு நாள், அன்னையும் யானும் இருந்தேமா – அன்னையும் நானும் இருக்கும் பொழுது, இல்லிரே – வீட்டில் உள்ளவர்களே, உண்ணு நீர் வேட்டேன் – தாகத்தில் இருக்கின்றேன், என வந்தாற்கு – என்று வந்தவனுக்கு, அன்னை – தாய், அடர் பொன் சிரகத்தால் வாக்கி – அடர்ந்தப் பொன்னினால் செய்யப்பட்டக் கலத்தில் வார்த்து, சுடர் இழாய் – ஒளியுடைய அணிகலன்களை அணிந்தவளே, உண்ணு நீர் ஊட்டி வா – குடிக்கத் தண்ணீரைக் கொடுத்து விட்டு வா, என்றாள் என – கூறினாள் என்று, யானும் – நானும், தன்னை அறியாது – அவன் தான் என்று அறியாது, சென்றேன் – சென்றேன், மற்று என்னை வளை முன்கை பற்றி – அங்கு அவன் வளையல் அணிந்த என்னுடைய முன் கையைப் பற்றி, நலிய – வருத்த, தெருமந்திட்டு – கலக்கத்துடன், அன்னாய் – அம்மா, இவன் ஒருவன் செய்தது காண் – இவன் செய்ததை நீ பார், என்றேனா – என்று கூறினேன், அன்னை அலறிப் படர்தர – என்னுடைய தாய் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடி வந்தாள், தன்னை – அவனை, யான் – நான், உண்ணு நீர் விக்கினான் என்றேனா – நீர் குடிக்கும் போது விக்கினான் என்றேன், அன்னையும் – என்னுடைய தாயும், தன்னைப் புறம்பு அழித்து நீவ – அவனுடைய முதுகைத் தடவிக் கொடுத்தாள், மற்று என்னைக் கடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கி – அதன் பின் அவன் தன் கடைக் கண்களால் கொல்பவன் போல் என்னை நோக்கி, நகை கூட்டம் செய்தான் – மகிழ்ச்சியுடன் நட்பைச் செய்தான், அக் கள்வன் மகன் – அந்தக் கள்ளன்
கலித்தொகை 110, சோழன் நல்லுத்திரன், முல்லை, தலைவியும் தலைவனும் சொன்னது
கடி கொள் இருங்காப்பில் புல்லினத்து ஆயர்
குடிதொறும் நல்லாரை வேண்டுதி, எல்லா,
இடு தேள் மருந்தோ நின் வேட்கை? தொடுதரத்
துன்னித் தந்தாங்கே நகை குறித்து எம்மைத்
திளைத்தற்கு எளியமாக் கண்டை, அளைக்கு எளியாள் 5
வெண்ணெய்க்கும் அன்னள் எனக் கொண்டாய், ஒண்ணுதால்!
ஆங்கு நீ கூறின் அனைத்து ஆக, நீங்குக,
அச்சத்தான் மாறி அசைவினான் போத்தந்து
நிச்சம் தடுமாறும், மெல் இயல் ஆய் மகள்,
மத்தம் பிணித்த கயிறு போல் நின் நலம் 10
சுற்றிச் சுழலும் என் நெஞ்சு,
விடிந்த பொழுதினும் இல் வயின் போகாது,
கொடும் தொழுவினுள் பட்ட கன்றிற்குச் சூழும்
கடுஞ்சூல் ஆ நாகு போல், நின் கண்டு நாளும்
நடுங்கு அஞர் உற்றது என் நெஞ்சு, 15
எவ்வம் மிகுதர, எம் திறத்து எஞ்ஞான்று,
நெய் கடை பாலின் பயன் யாதும் இன்று ஆகிக்
கை தோயல் மாத்திரை அல்லது செய்தி
அறியாது அளித்து என் உயிர்,
அன்னையோ! மன்றத்துக் கண்டாங்கே சான்றார் மகளிரை 20
இன்றி அமையேன் என்று இன்னவும் சொல்லுவாய்
நின்றாய், நீ சென்றீ, எமர் காண்பர், நாளையும்
கன்றொடு சேறும் புலத்து.
தலைவி:  மிகுந்த காவலையுடைய குடியிருப்புகளில் உள்ள ஆட்டு இடையர்களின் குடிகள் ஒவ்வொன்றிலும் உள்ள மகளிரை நீ விரும்புகிறாய். ஏடா! உன்னுடைய விருப்பம் தேள் கடிக்கு விரைந்து இட வேண்டிய மருந்துப் போன்றதா? உன்னை ஒரு முறைத் தொட விட்டதற்கு, என்னுடைய நகைதலை எண்ணி, நான் புணர்ச்சிக்கு எளிமையானவள் என்று எண்ணுகின்றாய் நீ.  சிறிது மோரை வேண்டியவர்க்குக் கொடுப்பதால் இவள் வெண்ணையையும் கொடுப்பாள் என்று எண்ணி விட்டாய்.
தலைவன்:  ஒளியுடைய நெற்றியை உடையவளே! உன் கருத்து அவ்வாறு ஆயின் ஆகட்டும், நீங்கட்டும். மென்மையான ஆயர்க் குடும்பத்தின் பெண்ணே! நீ கூறிய சொற்களினால் அச்சம் கொண்டு உன்னிடமிருந்து என்னிடம் வந்து, மீண்டும் உன்னிடம் வந்து, தயிர் கடையும் மத்தில் சுற்றிய கயிற்றைப் போல் சுழலுகின்றது, என்னுடைய நெஞ்சம்.  விடிந்த வேளையிலும் இல்லத்திற்குப் போகாமல் வளைந்த தொழுவினுள் இடப்பட்ட தன் கன்றினைச் சுற்றி வரும் முதற் கன்றை ஈன்ற இளம் பசுவைப் போல உன்னைக் கண்டு எந்நாளும் என் நெஞ்சு அஞ்சி நடுங்குகிறது மிகுந்த வருத்தத்தால்.  எப்பொழுதும் நெய்யை எடுத்த பின்னர்ப் பால் பயன் இல்லாதது போன்று, கையால் தொடுகின்ற அளவாக ஆகிவிட்டது என் நிலைமை . என் உயிர் பரிதாபத்திற்குரியது.
தலைவி: அப்படியா! சான்றாண்மை உடையவர்களின் பெண்களைப் பொது மன்றத்தில் கண்டால் ‘அவர்கள் இல்லாமல் வாழ மாட்டேன்’ என்று சொல்லி நிற்கிறாய்.  நீ இங்கிருந்துச் செல்லுவாயாக! நீ இங்கிருந்தால் என்னுடைய சுற்றத்தார் உன்னைக் காண நேரிடும். நாளை கன்றுகளுடன் மேய்ப்புலத்திற்குச் செல்வேன். நீ அப்பொழுது அங்கு வருவாயாக!
சொற்பொருள்:  கடி கொள் இருங்காப்பில் – மிகுந்த காவலையுடைய குடியிருப்புகளில் உள்ள, புல்லினத்து ஆயர் குடிதொறும் – ஆட்டு இடையர்கள் குடிகள் ஒவ்வொன்றிலும், நல்லாரை வேண்டுதி நீ – மகளிரை நீ விரும்புகிறாய் நீ, எல்லா – ஏடா, இடு தேள் மருந்தோ நின் வேட்கை – உன்னுடைய விருப்பம் தேள் கடிக்கு விரைந்து இட வேண்டிய மருந்துப் போன்றதா, தொடுதரத் துன்னித் தந்தாங்கே – உன்னை ஒரு முறை தொட விட்டதற்கு, நகை குறித்து – நகைதலை எண்ணி, எம்மைத் திளைத்தற்கு எளியமாக் கண்டை. – நான் புணர்ச்சிக்கு எளிமையானவள் என்று எண்ணுகின்றாய் (எளிய + மா, மா – ஓர் அசைச் சொல்), அளைக்கு எளியாள் வெண்ணெய்க்கும் அன்னள் எனக் கொண்டாய் – சிறிது மோரை வேண்டியவர்க்கு கொடுப்பதால் வெண்ணையையும் கொடுப்பாள் என்று எண்ணி விட்டாய், ஒண்ணுதால் – ஒளியுடைய நெற்றியை உடையவளே, ஆங்கு நீ கூறின் அனைத்து ஆக – உன் கருத்து அவ்வாறு ஆயின் ஆகட்டும், நீங்குக – நீங்கட்டும், அச்சத்தான் மாறி அசைவினான் போத்தந்து நிச்சம் தடுமாறும் – நீ கூறிய சொற்களினால் அச்சம் கொண்டு உன்னிடமிருந்து என்னிடம் வந்து மீண்டும் உன்னிடம் வந்து, மெல் இயல் ஆய் மகள் – மென்மையான ஆயர் குடும்பத்தின் பெண்ணே, மத்தம் பிணித்த கயிறு போல் நின் நலம் சுற்றிச் சுழலும் என் நெஞ்சு – மத்தத்தில் கட்டிய கயிற்றைப் போல் சுழலுகின்றது என்னுடைய நெஞ்சம், விடிந்த பொழுதினும் – விடிந்த வேளையிலும், இல் வயின் போகாது – இல்லத்திற்கு போகாமல், கொடும் தொழுவினுள் பட்ட – வளைந்த தொழுவினுள் இடப்பட்ட, கன்றிற்குச் சூழும் – கன்றினைச் சுற்றி வரும், கடுஞ்சூல் ஆ நாகு போல் – முதற் கன்றை ஈன்ற பசுவைப் போல, நின் கண்டு நாளும் நடுங்கு அஞர் உற்றது என் நெஞ்சு – உன்னைக் கண்டு எந்நாளும் என் நெஞ்சு அஞ்சி நடுங்குகிறது, எவ்வம் மிகுதர – வருத்தம் மிகுந்து வர, எம் திறத்து – என்னிடத்து, எஞ்ஞான்று நெய் கடை பாலின் பயன் யாதும் இன்று ஆகி – எப்பொழுதும் நெய்யை எடுத்தப் பின்னர் பால் பயன் இல்லாதது, கை தோயல் மாத்திரை அல்லது செய்தி அறியாது – கையால் தொடுகின்ற அளவாக ஆகிவிட்டது, அளித்து என் உயிர் – என் உயிர் பரிதாபத்திற்குரியது,
அன்னையோ – அப்படியா, மன்றத்துக் கண்டாங்கே சான்றார் மகளிரை இன்றி அமையேன் என்று இன்னவும் சொல்லுவாய் நின்றாய் – சான்றாண்மை உடையவர்களின் பெண்களைப் பொது மன்றத்தில் கண்டால் அவர்கள் இல்லாமல் வாழ மாட்டேன் என்று சொல்லி நிற்கிறாய், நீ சென்றீ – நீ செல்லுவாயாக, எமர் காண்பர் – என்னுடைய சுற்றத்தார் காண்பார்கள், நாளையும் கன்றொடு சேறும் புலத்து – நாளை கன்றுகளுடன் மெய்ப்புலத்திற்குச் செல்வேன்
கலித்தொகை 111, சோழன் நல்லுருத்திரன், முல்லை, தலைவி தோழியிடம் சொன்னது
தீம் பால் கறந்த கலம் மாற்றக், கன்று எல்லாம்
தாம்பின் பிணித்து, மனை நிறீஇ, யாய் தந்த
பூங்கரை நீலம் புடை தாழ மெய் அசைஇ, பாங்கரும்
முல்லையும் தாய பாட்டங்கால், தோழி, நம்
புல்லினத்து ஆயர் மகளிரோடு எல்லாம் 5
ஒருங்கு விளையாட, அவ்வழி வந்த
குருந்தம் பூங்கண்ணிப் பொதுவன் மற்று என்னை,
“முற்று இழை ஏஎர் மட நல்லாய்! நீ ஆடும்
சிற்றில் புனைகோ சிறிது” என்றான். “எல்லா! நீ
பெற்றேம் யாம் என்று பிறர் செய்த இல் இருப்பாய், 10
கற்றது இலை மன்ற காண்” என்றேன். “முற்று இழாய்!
தாது சூழ் கூந்தல் தகைபெறத் தைஇய
கோதை புனைகோ நினக்கு?” என்றான். “எல்லா நீ
ஏதிலார் தந்த பூக் கொள்வாய் நனி மிகப்
பேதையை மன்ற பெரிது” என்றேன்.  “மாதராய்! 15
ஐய பிதிர்ந்த சுணங்கு அணி மென் முலை மேல்
தொய்யில் எழுதுகோ மற்று?” என்றான். “யாம் பிறர்
செய்புறம் நோக்கி இருத்துமோ, நீ பெரிது
மையலை மாதோ விடுக” என்றேன். தையலாய்
சொல்லிய ஆறு எல்லாம் மாறு மாறு யான் பெயர்ப்ப 20
அல்லாந்தான் போலப் பெயர்ந்தான் அவனை, நீ
ஆயர் மகளிர் இயல்பு உரைத்து, எந்தையும்
யாயும் அறிய உரைத்தீயின், யான் உற்ற
நோயும் களைகுவை மன்.
பொருளுரை:  இனிய பாலைக் கறந்த கலங்களை எடுத்து வைத்து விட்டு, கன்றுகளைக் கயிற்றால் கட்டி, இல்லத்தில் நிறுத்தி, தாய் தந்த பூத்தொழிலையுடைய கரையை உடைய நீல ஆடை பக்கங்களில் தாழ என் உடலை அசைத்து, பாங்கர் மரங்களும் முல்லைக் கொடியும் பரந்த தோட்டத்தில், என் தோழியே, நம்முடைய ஆட்டு இனத்தையுடைய ஆயர் மகளிருடன் நான் ஒன்றாக விளையாட, அந்த வழியாக வந்த, குருந்தம் பூவால் செய்த கண்ணியை அணிந்த இடையன் ஒருவன் என்னை நோக்கி, “அணிகலன்களை அணிந்த, அழகினையும் மடப்பதையும் உடைய பெண்ணே! நீ கட்டும் சிற்றில்லை நானும் உன்னுடன் சிறிது சேர்ந்துக் கட்டலாமா?” என்றான். ” ஏடா, உனக்கு என்று ஒரு வீட்டைக் கட்டாது பிறர் கட்டிய வீட்டில் இருக்கக் கற்றவனே! நீ கற்றவன் இல்லை உறுதியாக. காண்பாயாக” என்றேன். ” திருத்தமான அணிகலன்களை அணிந்தவளே! சிறப்பாகச் செய்த மலர் மாலையைத் தாது உடைய உன்னுடைய கூந்தலில் அணியட்டுமா?” என்றான். “ஏடா! பிறர் பறித்த மலர்களைப் பெறுகின்றாய் நீ, நனி மிகப் பேதையை மன்ற உறுதியாகப் பெரிது என்றேன் – நீ மிகவும் பெரிய பேதை உறுதியாக” என்றேன். அவன் “பெண்ணே! சிறிய சுணங்கு சிதறிய உன்னுடைய மென்மையான முலைகள் மேல் தொய்யில் வரையட்டுமா?” என்றான். நான் அதற்கு, “உனக்குத் திருமணம் புரிந்து தொய்யில் எழுதும் நோக்கம் இல்லை. நீ மிகவும் காதல் மயக்கம் கொண்டவன்” என்றேன்.  என்னுடைய தோழியே,  இவ்வாறு அவன் சொல்லியதை எல்லாம் நான் மறுக்க, வருந்துபவன் போல் அவன் சென்றான். அவனிடம் நீ ஆயர் மகளிரின் தன்மையை உரைத்து, என்னுடைய தந்தையும் தாயும் அறிய அவர்களிடம் சொல்லுவாய் ஆயின், நான் அடைந்த நோயை நீ போக்குவாய்.
சொற்பொருள்:  தீம் பால் கறந்த கலம் மாற்றக் கன்று எல்லாம் தாம்பின் பிணித்து – இனிய பாலைக் கறந்த கலங்களை எடுத்து வைத்து விட்டு கன்றுகளைக் கயிற்றால் கட்டி, மனை நிறீஇ – இல்லத்தில் நிறுத்தி, யாய் தந்த பூங்கரை நீலம் புடை தாழ – தாய் தந்த பூத் தொழிலையுடைய கரையை உடைய நீல ஆடை பக்கத்தில் தாழ, மெய் அசைஇ – உடலை அசைத்து, பாங்கரும் முல்லையும் தாய பாட்டங்கால் – பாங்கர் மரங்களும் முல்லைக் கொடியும் பரந்த தோட்டத்தில், தோழி – என் தோழி, நம் புல்லினத்து ஆயர் மகளிரோடு – நம்முடைய ஆட்டு இனத்தையுடைய ஆயர் மகளிருடன், எல்லாம் ஒருங்கு விளையாட – யாவரும் ஒன்றாக விளையாட, அவ்வழி வந்த குருந்தம் பூங்கண்ணிப் பொதுவன் – அந்த வழியாக வந்த குருந்தம் பூவால் செய்த கண்ணியை அணிந்த பொதுவன் ஒருவன், மற்று என்னை முற்று – பின்பு என்னை நோக்கி, இழை ஏஎர் மட நல்லாய் – அணிகலன்களை அணிந்த அழகினையும் மடப்பதையும் உடைய பெண்ணே, நீ ஆடும் சிற்றில் புனைகோ சிறிது – நீ கட்டும் சிற்றில்லை நானும் உன்னுடன் சிறிது சேர்ந்து கட்டலாமா, என்றான் – என்றான், எல்லா – ஏடா, நீ பெற்றேம் யாம் என்று பிறர் செய்த இல் இருப்பாய் – உனக்கு என்று ஒரு வீட்டைக் கட்டாது பிறர் கட்டிய வீட்டில் இருக்கக் கற்றவனே, கற்றது இலை – நீ கற்றவன் இல்லை, மன்ற – உறுதியாக, காண் என்றேன் – காண்பாயாக என்றேன், முற்று இழாய் – திருத்தமான அணிகலன்களை அணிந்தவளே, தாது சூழ் கூந்தல் தகைபெறத் தைஇய கோதை புனைகோ நினக்கு என்றான் – சிறப்பாகச் செய்த மலர் மாலையை தாது உடைய உன்னுடைய கூந்தலில் அணியட்டுமா, எல்லா – ஏடா, நீ ஏதிலார் தந்த பூக் கொள்வாய் – பிறர் பறித்த மலர்களைப் பெறுகின்றாய் நீ, நனி மிகப் பேதையை மன்ற உறுதியாக பெரிது என்றேன் – நீ மிகவும் பெரிய பேதை உறுதியாக என்றேன், மாதராய் – பெண்ணே, ஐய பிதிர்ந்த சுணங்கு அணி மென் முலை மேல் தொய்யில் எழுதுகோ மற்று என்றான் – சிறிய சுணங்கு சிதறிய உன்னுடைய மென்மையான முலைகள் மேல் தொய்யில் வரையட்டுமா என்றான், யாம் பிறர் செய்புறம் நோக்கி இருத்துமோ – உனக்கு மணம் புரிந்து எழுதும் நோக்கம் இல்லை, நீ பெரிது மையலை மாதோ விடுக என்றேன் – நீ மிகவும் காதல் மயக்கம் கொண்டவன் என்றேன், தையலாய் – இளம் பெண்ணே, சொல்லிய ஆறு எல்லாம் மாறு மாறு யான் பெயர்ப்ப – அவன் இவ்வாறு சொல்லியதை எல்லாம் நான் மறுக்க, அல்லாந்தான் போலப் பெயர்ந்தான் – வருந்துபவன் போல் சென்றான், அவனை நீ ஆயர் மகளிர் இயல்பு உரைத்து – அவனிடம் நீ ஆயர் மகளிரின் தன்மையை உரைத்து ,எந்தையும் யாயும் அறிய – என்னுடைய தந்தையும் தாயும் அறிய ,உரைத்தீயின் – சொல்லுவாய் ஆயின், யான் உற்ற நோயும் களைகுவை மன் – நான் அடைந்த நோயை நீ போக்குவாய்
கலித்தொகை 113, சோழன் நல்லுருத்திரன், முல்லை, தலைவனும் தலைவியும் சொன்னது
நலம் மிக நந்திய நயவரு தட மென் தோள்
அலமரல் அமர் உண்கண் அம் நல்லாய் நீ உறீஇ
உலமரல் உயவு நோய்க்கு உய்யும் ஆறு உரைத்துச் செல்
பேர் ஏமுற்றார் போல முன் நின்று விலக்குவாய்
யார் எல்லா நின்னை அறிந்ததூஉம் இல்வழி  5
தளர் இயால் என் அறிதல் வேண்டின் பகை அஞ்சாப்
புல்லினத்து ஆயர் மகனேன் மற்று யான்
ஒக்கும் மன்
புல்லினத்து ஆயனை நீ ஆயின் குடம் சுட்டு
நல் இனத்து ஆயர் எமர்  10
எல்லா
நின்னொடு சொல்லின் ஏதமோ இல்லை மன்
ஏதம் அன்று எல்லை வருவான் விடு
விடேன்
உடம்பட்டு நீப்பார் கிளவி மடம் பட்டு  15
மெல்லிய ஆதல் அறியினும் மெல்லியால்
நின் மொழி கொண்டு யானோ விடுவேன் மற்று என் மொழி கொண்டு
என் நெஞ்சம் ஏவல் செயின்
நெஞ்சு ஏவல் செய்யாது என நின்றாய்க்கு எஞ்சிய
காதல் கொள் காமம் கலக்குற ஏதிலார் 20
பொய்ம் மொழி தேறுவது என்
தெளிந்தேன் தெரி இழாய் யான்
பல்கால் யாம் கான் யாற்று அவிர் மணல் தண் பொழில்
அல்கல் அகல் அறை ஆயமொடு ஆடி
முல்லை குருந்தொடு முச்சி வேய்ந்து எல்லை  25
இரவு உற்றது இன்னும் கழிப்பி அரவு உற்று
உருமின் அதிரும் குரல் போல் பொரு முரண்
நல் ஏறு நாகு உடன் நின்றன
பல் ஆன் இன நிரை நாம் உடன் செலற்கே.
தலைவன்:  நன்மை மிகப் பெருகிய விருப்பம் தருகின்றன பெரிய மென்மையான தோளையும் சுழலும் பொருந்திய மையிட்ட கண்களையுமுடைய அழகிய நல்லாளே! நீ உண்டாக்கிய துன்ப நோயிலிருந்து உய்யும் வழியை கூறி விட்டு செல்வாயாக,
தலைவி:  பித்துப் பிடித்தவன் போல என் முன்னால் நின்று என்னைத் தடுக்கும் நீ யார்? ஏடா! நீ யார் என்பது எனக்குத் தெரியாது
தலைவன்:  மனம் நெகிழும் தன்மையுடையவளே! நான் யார் என்பதை நீ அறிய வேண்டினால், பகைவர்களுக்கு அஞ்சாத ஆட்டினத்தையுடைய ஆயர்குடியின் மகன் நான்,
தலைவி:  அது மிகவும் ஒக்கும். நீ ஆட்டினத்தவன் ஆயின், எம்முடைய குடும்பத்தினர் குடத்தில் பால் கறக்கும் நல்ல ஆயர் இனத்தினர்,
தலைவன்:  ஏடி! உன்னுடன் சொல்லாடுவதில் குற்றம் எதுவும் இல்லை,
தலைவி:  குற்றம் இல்லையேல் நாளை நாம் பேசலாம். என்னை போக விடு,
தலைவன்:  முதலில் உடன்பட்டு பின் கைவிட்டுப் போவாரின் சொற்கள் நிலையற்றது என்பதை அறிந்தும், மென்மையானவளே, நீ கூறுவதைக் கேட்டு, நானா உன்னைப் போக விடுவேன்? என் சொற்களைக் கேட்டும் என் நெஞ்சு பணியாது ஆதலால், உன்னைப் போக விடமாட்டேன்.
தலைவி:  உன் நெஞ்சு உனக்குப் பணியாது என்று கூறும் உனக்கு காதலால் மனம் கலங்கியுள்ளது. பிறர் கூறும் பொய் மொழிகளை எவ்வாறு நீ அறிவாய்?
தலைவன்:  நான் உண்மையை அறிந்துக் கொண்டேன், அழகிய அணிகலன்களை அணிந்தவளே.  முன்பு நாம் பலமுறை காட்டு ஆற்றின் ஒளியுடைய மணலில் உள்ள குளிர்ந்த சோலையில் அகன்ற பாறையில் தோழியருடன் விளையாடினோம், முல்லை மலர்களையும் குருந்த மலர்களையும் தலையில் அணிந்து.  பகல் இரவு ஆகிவிட்டது. நீ அதை உணராமல் இருக்கின்றாய்.  பாம்பைக் கண்டு இடிக்கும் இடியின் குரல் போன்ற குரலையுடைய போரிடும் நல்ல ஏறுகள் தங்கள் பசுக்களுடன் நிற்கின்றன. நாம் கூடுவதற்கு உடன்படுவாயாக.
சொற்பொருள்:  நலம் மிக நந்திய நயவரு தட மென் தோள் அலமரல் அமர் உண்கண் அம் நல்லாய் – நன்மை மிகப் பெருகிய விருப்பம் தருகின்றன பெரிய மென்மையான தோளையும் சுழலும் பொருந்திய மையிட்ட கண்களையுமுடைய அழகிய நல்லாளே, நீ உறீஇ உலமரல் உயவு நோய்க்கு உய்யும் ஆறு உரைத்துச் செல் – நீ உண்டாக்கிய துன்ப நோயிலிருந்து உய்யும் வழியை கூறி விட்டு செல்வாயாக,
பேர் ஏமுற்றார் போல முன் நின்று விலக்குவாய் யார் – பித்துப் பிடித்தவன் போல என் முன்னால் நின்று என்னைத் தடுக்கும் நீ யார், எல்லா – ஏடா, நின்னை அறிந்ததூஉம் இல்வழி – நீ யார் என்பது எனக்குத் தெரியாது
தளர் இயால் – மனம் நெகிழும் தன்மையுடையவளே, என் அறிதல் வேண்டின் – நான் யார் என்பதை நீ அறிய வேண்டினால், பகை அஞ்சாப் புல்லினத்து ஆயர் மகனேன் மற்று யான் – பகைவர்களுக்கு அஞ்சாத ஆட்டினத்தையுடைய ஆயர்குடியின் மகன் நான்,
ஒக்கும் மன் – மிகவும் ஒக்கும், புல்லினத்து ஆயனை நான் நீ ஆயின் குடம் சுட்டு நல் இனத்து ஆயர் எமர் – நீ ஆட்டினத்தவன் ஆயின் எம்முடைய குடும்பத்தினர் குடத்தில் பால் கறக்கும் நல்ல ஆயர் இனத்தினர்,
எல்லா – ஏடி, நின்னொடு சொல்லின் ஏதமோ இல்லை மன் – உன்னுடன் சொல்லாடுவதில் குற்றம் எதுவும் இல்லை,
ஏதம் அன்று எல்லை வருவான் விடு – குற்றம் இல்லையேல் நாளை பேசலாம். என்னை போக விடு,
விடேன் – உன்னைப் போக விடமாட்டேன், உடம்பட்டு நீப்பார் கிளவி மடம் பட்டு மெல்லிய ஆதல் அறியினும் – முதலில் உடன்பட்டு பின் கைவிட்டுப் போவாரின் சொற்கள் நிலையற்றது என்பதை அறிந்தும், மெல்லியால் – மென்மையானவளே, நின் மொழி கொண்டு – நீ கூறுவதைக் கேட்டு, யானோ விடுவேன் – நானா உன்னைப் போக விடுவேன், மற்று என் மொழி கொண்டு என் நெஞ்சம் ஏவல் செயின் – என் சொற்களைக் கேட்டும் என் நெஞ்சு பணியாது ஆதலால்,
நெஞ்சு ஏவல் செய்யாது என நின்றாய்க்கு எஞ்சிய காதல் கொள் காமம் கலக்குற – உன் நெஞ்சு உனக்குப் பணியாது என்று கூறும் உனக்கு காதலால் மனம் கலங்கியுள்ளது, ஏதிலார் பொய்ம் மொழி தேறுவது என் – பிறர் கூறும் பொய் மொழிகளை எவ்வாறு நீ அறிவாய்,
தெளிந்தேன் தெரி இழாய் – உண்மையை அறிந்துக் கொண்டேன் அழகிய அணிகலன்களை அணிந்தவளே, யான் – நான், பல்கால் – பலமுறை, யாம் – நாம், கான்யாற்று – காட்டு ஆறு, அவிர் மணல் – ஒளியுடைய மணல், தண் பொழில் அல்கல் அகல் அறை ஆயமொடு ஆடி – குளிர்ந்த சோலையில் அகன்ற பாறையில் தோழியருடன் விளையாடி, முல்லை குருந்தொடு முச்சி வேய்ந்து – முல்லை மலர்களையும் குருந்த மலர்களையும் தலையில் அணிந்து, எல்லை இரவு உற்றது இன்னும் கழிப்பி – பகல் இரவு ஆகியும் இன்னும் செல்லாமல் இருக்கின்றாய், அரவு உற்று உருமின் அதிரும் குரல் போல் – பாம்பைக் கண்டு இடிக்கும் இடியின் குரல்போல், பொரு முரண் நல் ஏறு நாகு உடன் நின்றன – போரிடும் நல்ல ஏறுகள் தங்கள் பசுக்களுடன் நின்றன, பல் ஆன் இன நிரை – பல பசுக் கூட்டங்கள், நாம் உடன் செலற்கே – நாமும் கூடுவதற்கு உடன்படுவாயாக
கலித்தொகை 114, சோழன் நல்லுருத்திரன், முல்லை, தலைவியும் தோழியும் சொன்னது
வாரி நெறிப்பட்டு இரும் புறம் தாஅழ்ந்த
ஓரிப் புதல்வன் அழுதனன் என்பவோ?
“புதுவ மலர் தைஇ எமர் என் பெயரால்
வதுவை அயர்வாரை கண்டு மதி அறியா
ஏழையை” என்று அகல நக்கு வந்தீயாய் நீ 5
தோழி, அவன் உழைச் சென்று
சென்று யான் அறிவேன் கூறுக மற்று இனி
சொல் அறியாப் பேதை, மடவை, மற்று எல்லா
நினக்கு ஒரூஉம் மற்று என்று அகல் அகலும் நீடு இன்று
நினக்கு வருவதாக் காண்பாய் அனைத்து ஆகச் 10
சொல்லிய சொல்லும் வியங்கொளக் கூறு,
தருமணல் தாழப் பெய்து, இல் பூவல் ஊட்டி,
எருமைப் பெடையோடு எமர் ஈங்கு அயரும்
பெரு மணம் எல்லாம் தனித்தே ஒழிய,
வரி மணல் முன்துறைச் சிற்றில் புனைந்த 15
திரு நுதல் ஆயத்தார் தம்முள் புணர்ந்த
ஒரு மணம் தான் அறியும், ஆயின் எனைத்தும்
தெருமரல் கைவிட்டு இருக்கோ? அலர்ந்த
விரி நீர் உடுக்கை உலகம் பெறினும்
அரு நெறி ஆயர் மகளிர்க்கு 20
இரு மணம் கூடுதல் இல் இயல்பு அன்றே!
தலைவி:  வாரி முடித்துத் புறத்தே தாழ விட்ட தலை முடியையுடைய நம் தலைவன் அழுதான் என்று கூறுகின்றனரோ?  அவ்வாறு கூறுவார்களாயின், நீ அவனிடம் சென்று, “புதிய மலர்களைக் கட்டி அவளுடைய உறவினர்கள் அவளுக்குத் திருமண ஏற்பாடு செய்வதைக் கண்டும் ஒன்றும் செய்யாத அறிவற்றவனே” என்று நன்றாக எள்ளி நகைத்து விட்டு வா தோழி.
தோழி:  அவனிடம் சென்று சொல்வதை அறிவேன். இனி வேறு என்ன சொல்ல வேண்டும்?
தலைவி:  மடவாய்!  “நீ உன்னுடைய மண விருப்பத்தை அவளுடைய குடும்பத்தாரிடம் சொல்லத் தெரியாத மடப்பம் உடையவன்.  அதனால் திருமணம் உனக்குரியதாக இல்லாமல் உன்னிடமிருந்து அகலும்.  நீடிக்காமல் உடனேயே நிகழ்ந்து விடும்.  அம்மணம் உனக்கே நிகழும் வழிகளை அறிந்து விரைந்து செயலாற்று” என்று அவனிடம் கூறு.  நீ கூறும் சொற்களை அவன் ஏற்றுக் கொள்ளும்படி உறுதியுடன் கூறு.
புதுமணல் பெய்து, மனைக்குச் செம்மண் பூசி, பெண் எருமையின் கொம்பை நட்டி, கடவுளை வழிபட்டு என் குடும்பத்தார் நிகழ்த்தும் பெரிய திருமணம் அவனில்லாமல் நிகழும்.  திட்டுத் திட்டாக உள்ள மணலையுடையத் துறையில் சிற்றில் கட்டி விளையாடிய அழகிய நெற்றியையுடைய தோழியருடன் விளையாடிய பொழுது அவர்கள் அறியாதபடி என்னுடன் தான் புணர்ந்ததை அவன் அறிவான். அவ்வாறு இருக்க நான் உள்ளம் வருந்தி இருக்க வேண்டுமா? நீர் சூழ்ந்த பெரிய உலகத்தையே பெற்றாலும், ஒழுக்க நெறியையுடைய ஆயர் பெண்களுக்கு, இருமணம் நிகழ்வது இயல்பு இல்லையே!
சொற்பொருள்:  வாரி நெறிப்பட்டு இரும் புறம் தாஅழ்ந்த ஓரிப் புதல்வன் – வாரி முடித்துத் புறத்தே தாழ விட்ட தலை முடியையுடைய நம் தலைவன், அழுதனன் என்பவோ – அழுதான் என்று கூறுகின்றனரோ, புதுவ மலர் தைஇ எமர் என் பெயரால் வதுவை அயர்வாரை கண்டு மதி அறியா ஏழையை – புதிய மலர்கள் கட்டி என்னுடைய உறவினர்கள் எனக்குத் திருமண ஏற்பாடு செய்வதைக் கண்டும் ஒன்றும் செய்யாத அறிவற்றவனே – என்று – என்று, அகல நக்கு வந்தீயாய் நீ – அவனை நன்றாக எள்ளி நகைத்து விட்டு வருக, தோழி – தோழி, அவன் உழைச் சென்று – அவனருகில் சென்று,
சென்று யான் அறிவேன் கூறுக மற்று இனி – அவனிடம் சென்று சொல்வதை அறிவேன். இனி என்ன சொல்ல வேண்டும்?
மடவை – மடவாய், சொல் அறியாப் பேதை – நீ உன்னுடைய மண விருப்பத்தை அவளுடைய குடும்பத்தாரிடம் சொல்லத் தெரியாத பேதைமை உடையவன், மற்று எல்லா நினக்கு ஒரூஉம் மற்று என்று அகல் அகலும் – அதனால் திருமணம் உனக்குரியதாக இல்லாமல் உன்னிடமிருந்து அகலும், நீடு இன்று – நீடிக்காமல் உடனேயே நிகழ்ந்து விடும், நினக்கு வருவதாக் காண்பாய் – அம்மணம் உனக்கே நிகழும் வழிகளை அறிந்து விரைந்து செயலாற்று, அனைத்து ஆகச் சொல்லிய சொல்லும் வியங்கொளக் கூறு – நீ கூறும் சொற்களை அவன் ஏற்றுக் கொள்ளும்படி உறுதியுடன் கூறுவாயாக,
தருமணல் தாழப் பெய்து – புதுமணல் பெய்து, இல் பூவல் ஊட்டி – மனைக்குச் செம்மண் பூசி, எருமைப் பெடையோடு எமர் ஈங்கு அயரும் பெரு மணம் எல்லாம் – பெண் எருமையின் கொம்பை நட்டி கடவுளை வழிபட்டு என் குடும்பத்தார் நிகழ்த்தும் பெரிய திருமணம், தனித்தே ஒழிய – அவனில்லாமல் நிகழ, வரி மணல் முன்துறை திட்டுத் திட்டாக உள்ள மணலில் துறையில், சிற்றில் புனைந்த – சிற்றில் கட்டி விளையாடிய, திரு நுதல் ஆயத்தார் தம்முள் புணர்ந்த ஒரு மணம் தான் அறியும் – அழகிய நெற்றியையுடைய தோழியருடன் விளையாடிய பொழுது அவர்கள் அறியாதபடி என்னுடன் புணர்ந்ததை அவன் அறிவான், ஆயின் எனைத்தும் தெருமரல் கைவிட்டு இருக்கோ – அவ்வாறு இருக்க நான் உள்ளம் வருந்தி இருப்பேனா, அலர்ந்த விரி நீர் உடுக்கை உலகம் பெறினும் – நீர் சூழ்ந்த பெரிய உலகத்தையே பெற்றாலும், அரு நெறி ஆயர் மகளிர்க்கு – ஒழுக்க நெறியையுடைய ஆயர் பெண்களுக்கு, இரு மணம் கூடுதல் இல் இயல்பு அன்றே – இருமணம் நிகழ்வது இயல்பு இல்லையே
கலித்தொகை 116, சோழன் நல்லுருத்திரன், முல்லை, தலைவியும் தலைவனும் சொன்னது
பாங்கு அரும் பாட்டங்கால் கன்றொடு செல்வேம் எம்
தாம்பின் ஒரு தலை பற்றினை ஈங்கு எம்மை
முன்னை நின்று ஆங்கே விலக்கிய எல்லா நீ
என்னை ஏமுற்றாய் விடு
விடேஎன் தொடீஇய செல்வார்த் துமித்து எதிர் மண்டும் 5
கடு வய நாகு போல் நோக்கித் தொழு வாயில்
நீங்கிச் சினவுவாய் மற்று
நீ நீங்கு கன்று சேர்ந்தார்கண் கத ஈற்று ஆ சென்றாங்கு
வன்கண்ணள் ஆய்வரல் ஓம்பு
யாய் வருக ஒன்றோ பிறர் வருக மற்று நின் 10
கோ வரினும் இங்கே வருக தளரேன் யான்
நீ அருளி நல்க பெறின்
நின்னை யான் சொல்லினவும் பேணாய் நினைஇ
கனை பெயல் ஏற்றின் தலை சாய்த்து எனையதூஉம்
மாறு எதிர் கூறி மயக்குப்படுகுவாய் 15
கலத்தொடு யாம் செல்வுழி நாடிப் புலத்தும்
வருவையால் நாண் இலி நீ.
தலைவி:  பிறர் சேருதற்கரிய எங்கள் தோட்டத்திற்கு கன்றுடன் செல்லும் என் கயிற்றின் ஒரு முனையை நீ பற்றியுள்ளாய்.  இங்கு முன்பு என்னை இவ்வாறு விலக்கினாய் நீ. ஏடா!  உனக்கு பித்தம் பிடித்து விட்டது. என்னைப் போகவிடு,
தலைவன்:  நான் உன்னைப் போக விடமாட்டேன்.  தன்னைத் தொடுவாரைத் தாக்கித் தள்ளிவிட்டு எதிரே விரைந்துச் செல்லும் வலிமையான இளம் எருமையைப் போல நோக்கி, தொழுவின் வாசலில் இருந்து நீங்கி சினம் கொள்கின்றாய் நீ,
தலைவி:  நீ இங்கிருந்து போ.  தன்னுடைய கன்றின் அருகில் சென்றவர்கள்மேல் சினம் கொள்ளும் புதிதாக ஈன்ற பசுவைப் போன்று, என் தாய் கடுஞ்சினம் கொள்வாள்.  அவளிடமிருந்து உன்னைப் பாதுகாத்துக் கொள்,
தலைவன்:  உன் தாய் வரட்டும், அல்லது பிறர் வரட்டும்.  உன்னுடைய தந்தை வந்தாலும் வரட்டும்.  நான் அஞ்ச மாட்டேன், உன்னுடைய அருள் கிடைக்கப்பெற்றால்,
தலைவி:  நான் கூறிய எதையும் நீ ஏற்றுக்கொள்ளவில்லை.  செறிந்த மழையில் தலையைச் சாய்த்து நிற்கும் எருது போல, நான் கூறும் சொற்களுக்கு எதிர்ச்சொல் கூறி மயக்கமுற்றவனே! மாடு மேய்க்கும் இடத்திற்கு நான் பால் கலத்துடன் செல்வதால், நீ அங்கு வா, நாணம் இல்லாதவனே.  அங்குக் கூடி மகிழ்வோம்
சொற்பொருள்:  பாங்கு அரும் பாட்டங்கால் – பிறர் சேருதற்கரிய தோட்டத்திற்கு, கன்றொடு செல்வேம் எம் தாம்பின் ஒரு தலை பற்றினை – கன்றுடன் செல்லும் என்னுடைய கயிற்றின் ஒரு முனையை நீ பற்றியுள்ளாய், ஈங்கு எம்மை முன்னை நின்று ஆங்கே விலக்கிய – இங்கு முன்பு இவ்வாறு விலக்கிய நீ, எல்லா – ஏடா, நீ என்னை ஏமுற்றாய் – உனக்கு பித்தம் பிடித்து விட்டது, விடு – என்னைப் போகவிடு,
விடேஎன் – நான் உன்னைப் போக விடமாட்டேன், தொடீஇய செல்வார்த் துமித்து – தன்னைத் தொடுவாரைத் தாக்கித் தள்ளிவிட்டு, எதிர் மண்டும் – எதிரே விரைந்துச் செல்லும், கடு வய நாகு போல் – வலிமையான இளம் எருமையைப் போல, நோக்கி – நோக்கி, தொழு வாயில் நீங்கிச் சினவுவாய் மற்று – தொழுவின் வாசலில் இருந்து நீங்கி சினம் கொள்கின்றாய்,
நீ நீங்கு – நீ இங்கிருந்து போ, கன்று சேர்ந்தார்கண் கத ஈற்று ஆ சென்றாங்கு – தன்னுடைய கன்றின் அருகில் சென்றவர்கள்மேல் சினம் கொள்ளும் புதிதாக ஈன்ற பசுவைப் போன்று, வன்கண்ணள் – தாய் கடுஞ்சினம் கொள்வாள், ஆய்வரல் ஓம்பு – வரும் அவளிடமிருந்து உன்னைப் பாதுகாத்துக் கொள்,
யாய் வருக – உன் தாய் வரட்டும், ஒன்றோ பிறர் வருக – அல்லது பிறர் வரட்டும், மற்று நின் கோ வரினும் இங்கே வருக – உன்னுடைய தந்தை வரட்டும், தளரேன் யான் – நான் அஞ்ச மாட்டேன், நீ அருளி நல்க பெறின் – உன்னுடைய அருள் கிடைக்கப்பெற்றால்,
நின்னை யான் சொல்லினவும் பேணாய் – நான் கூறிய எதையும் நீ ஏற்றுக்கொள்ளவில்லை, நினைஇ கனை பெயல் ஏற்றின் தலை சாய்த்து – செறிந்த மழையில் தலையைச் சாய்த்து நிற்கும் எருது போல,எனையதூஉம் மாறு எதிர் கூறி மயக்குப்படுகுவாய் – நான் கூறும் சொற்களுக்கு எதிர்ச்சொல் கூறி மயக்கமுற்றவனே, கலத்தொடு யாம் செல்வுழி நாடிப் புலத்தும் வருவையால் – மாடு மேய்க்கும் இடத்திற்கு நான் பால் கலத்துடன் செல்வதால் நீ அங்கு வா, நாண் இலி நீ – நாணம் இல்லாத நீ
REPORT THIS AD